சமூக மாற்றத்தை நோக்கி...

Wednesday, April 27, 2016

சகோதரி தவக்குல் கர்மான்


 அன்மைக்காலத்தில் ஒரு பிரச்சினை போகுது என்னவென்று சொன்னால், மிதவாத இஸ்லாமிய சிந்தனையில் உள்ள இலங்கை ஜமாஆத் இ இஸ்லாமி யினால் நாடாத்தப்படும் மாவனல்லையில் உள்ள ஆயிஷா சித்தீகா பெண்கள் கலாசாலையின் பட்டமளிப்பு விழாவுக்கு வந்திருந்த தவக்குல் கர்மான் என்ற ஏமனை சேர்ந்த ஒரு பெண் போராளி பற்றியதாகும். 
தீவிர இஸ்லாமிய சிந்தனையில் உள்ள தௌஹீத் ஜமாஆத் ஐ சேர்ந்த பல பிரிவினர் இப்பெண்மணியின் ஒரு செயலை கண்டித்துகொண்டிருக்கின்றனர்.

இதற்குக் காரணம் அவர் இலங்கை வந்த சமயம் அவரை வரவேற்கும் நிகழ்வு ஒன்று களனி பல்கலையில் நடைபெற்றது. இதன்போது அவரை சிங்களவர்களது கலாசார முறைப்படி மேலம் கொட்டி, கொத்து விளக்கேற்றி அவர்கள் வரவேற்றார்கள். இந்த நிகழ்வில் கொத்து விளக்கேற்றும் சந்தர்ப்பத்தில் அவரும் ஒரு விளக்கேற்றினார். அத்துடன் அங்கு நடைபெற்ற பல நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார். இதன்போது நடைபெற்ற நடன நிகழ்ச்சியிலும் அதன் இறுதியில் சிங்களப் பெண்களுடன் கைகோர்த்து நின்றார். இந்த சந்தர்ப்பங்களின் எடுக்கப்பட்ட சில போட்டோக்கள் வெளிவந்தமையேயாகும்.
அந்த விடயங்களுடன் சேர்ந்து அதற்கு சம்பந்தமே இல்லாத ஒரு போட்டோவும் விமர்சனத்திற்குற்பட்டது. அது என்னவென்றால் அந்த தவக்குல் கர்மான் அவர்கள் அன்னிய ஆண்களுடன் (குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை இன் பொதுச் செயலாளர் அவர்களுடன்) கைகுழுக்கும் போட்டோவாகும்.
இந்த விடயங்களில் கொத்து விளக்கேற்றும் நிகழ்வும், பான் கீ மூன் அவர்களுக்கு கைகொடுக்கும் நிகழ்வும் குறிப்பாக விமர்சனத்திற்குற்பட்டுள்ளது.
ஆனால் அவர்களை மேலம் கொட்டி அழைத்து சென்ற நிகழ்வு விமர்சனத்திற்குற்படவில்லை, மற்றும் இன்னும் பல....

இந்த விடயங்கள் குறித்து விமர்சனம் செய்யும் தௌஹீத் ஜாமாஆத்தினர்,
கொத்து விளக்கேற்றுதல் அந்நிய கலாசாரம் எனவே அந்த கலாசாரத்தை பின்பற்றியமை தவறு.
'யார் பிற சமுதாய கலாசாரத்திற்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அந்த சமுதாயத்தைச் சார்ந்தவரே' என்ற நபி மொழிக்கமையவே இந்த விமர்சனம் நடைபேறுகின்றது.

ஆனால் ஒரு விடயத்தை சொல்லியாக வேண்டும் இந்த விமர்சனங்கள்; விமர்சனம் என்ற எல்லையைத் தாண்டி ஒருவரைப் பற்றிய புறம்பேசலாகவே மாறியுள்ளது அவதானிக்கத்தக்கது.

ஆனால் இந்த விமர்சனத்துக்கும் அவரது செயலுக்கும் இடையில் தொடர்பிருக்கிறதா? என்ற கேள்வி எழுகின்றது. அது எப்படி என்றா கேற்கின்றீர். ஒரு கலாசாரத்துக்கு ஒப்பாகுதல் என்பதற்கும், அவர்களின் ஒரு நிகழ்வில் கலந்து கொள்ளுதல் என்பதற்கும் இடையில் வித்தியாசம் இருப்பது நாமறிந்தது. உதாரணமாக எமது திருமண நிகழ்வில் பந்தல் கட்டி மனப்பெண்ணையும், மனமகனையும் அழங்கரித்து காட்சிப்படுத்தியிருந்தால், இதனை நாம் அந்நிய சமுதாயத்தை பின்பற்றல் எனலாம், அதேனேரம் மாற்றுமத திருமண நிகழ்வு ஒன்றிற்கு நாம் அழைக்கப்பட்டிருந்து அங்கு நாம் சென்று அவர்களை வாழ்த்திவிட்டு வருதல் அந்த சமுதாயத்தை பின்பற்றியதாகாது. இது தான் அந்த வித்தியாசம்.

அவ்வாறே அவர்கள் அனைத்து நிகழ்வுகளுக்கும் நாள் நட்சத்திரம் பார்ப்பார்கள், அது அவர்களது கலாச்சாரம். இதனை நாமும் எமது நிகழ்வுகளில் அப்படி பார்த்தால் அது அவர்களது கலாச்சாரத்தை பின்பற்றியது மட்டுமன்றி இஸ்லாம் நேரடியாக தடுத்த விடயமுமாகும். இந்த நேரம் அவர்கள் எம்மையும் ஒரு நிகழ்வுக்கு அழைக்கிறார் (சில வேளை அழைத்தவர் பக்கத்துவீட்டுக் காரராக, ஒன்றாக தொழில் செய்பவராக........) அவர்கள் நாள் நட்சத்திரம் பார்க்கிறார்கள் என்று செல்லாமல் இருப்பதா? அப்படி சென்றால் அவர்களை பின்பற்றியது அல்லது ஆமோதித்ததாகுமா? சிந்திக்க.

அதேபோன்று அவர்களில் சிலர் மாட்டிறைச்சி சாப்பிட மாட்டார்கள், பிஸ்மில், குரான் ஓதி எதனையும் ஆரம்பிக்க மாட்டார்கள் என்ற நிலை இருக்கும் போது, இப்படியானவர்கள் எமது திருமணம் அல்லது வேறு ஒரு நிகழ்வுக்கு வருகிறர்கள் என்றால் அவர்களுக்காக எமது நடைமுறைகளை விட்டுவிட்டு நாம் எமது நிகழ்வை நடாத்துவதா? நாம் அப்படி செய்யமாட்டோம். ஏனெனில் அது எமது கலாச்சாரம், இஸ்லாமிய வழிகாட்டல். அதே நிலைதான் அந்நிய சகோதர சமூகத்தின் நிலையும்.

சிலர் காட்டும் இந்த கடினப்போக்கில் செயற்பட்டால் நிறைய விடயங்களில் நாம் முறண்பட வேண்டி ஏற்படும். உதாரணமாக
*தேர்தலில் போட்டியிட்டு முஸ்லிம் ஒருவர் பாராளுமன்றம் அல்லது மாகாணசபை அல்லது பிரதேச சபை இவறுக்கு தெரிவாகிறார் என்றால். அந்த இடங்களில் குரான் ஓதி ஆரம்பிப்பதில்லை. அது மட்டுமல்ல இஸ்லாம் தடுத்துள்ள சகுனம் பார்த்தல், நல்ல நாள் பார்த்தல் என்ற அம்சங்களின் பின்னர் தான் அவர்கள் அந்த நிகழ்வுகளை ஆரம்பிப்பார்கள். எனவே இங்கு சென்றால் அவர்களது கலாச்சாரத்தை பின்பற்றுகிறோம் என்று அங்கு செல்லாமல் இருப்பதா? அல்லது அங்கு சென்று இவை என்னால் செய்ய முடியாது என்பதா?
*தேசிய நிகழ்வுகளின் போது தேசிய கீதம் இசைக்கப்படும் (இங்கு இசை என்ற தெளிவின்மையும் உள்ளது) போது ஆடாமல் அசையாமல் தலையை நிமிர்த்தி நின்று அதற்கு மரியாதை செய்யவேண்டும். இது எமது கலாச்சாரத்துக்கு முறணானது இதனை நாம் செய்தால் அந்த சமூகத்தை பின்பற்றியதாகும் எனவே என்னால் முடியாது என்று சொல்வதா?
*போயா தினங்களில் அரச நிறுவனங்களில், வேலைத்தளங்களில் விடுமுறை வழங்கப்படும், நான் விடுமுறையை எடுக்கமாட்டேன் என்று கூறி நாம் மட்டும் வேலை செய்வதா? அப்படி ஒரு போதும் செய்யவும் மாட்டோம். அப்படி விடுமுறை எடுப்பது அவர்களது கலாச்சாரத்தை பின்பற்றியதாகும் என்பதா?

நாம் தமிழ் மொழி போசுகிறோம். இது தமிழர்களின் மொழியா இல்லையா? இது பற்றி என்ன சொல்லப்போகிறோம்? மொழி பிரச்சினை இல்லை என்றால் தொழுகையில் தமிழ் மொழியைப் பயன்படுத்தலாமே என்ற கேள்வி எழுவது நியாயம்?

இப்படி ஏராளம் ஏராளம்.

அடுத்து ஒரு வினா தொடுக்க நினைக்கிறேன். ஏனென்றால் சகோதரி தவக்குல் கர்மானை விமர்சிப்பதை அவதானிக்கும் போது, அது படுமோசம். அவர் ஒரு யூத கைகூலி, இஸ்லாமிய சமூகத்தை சீரழிப்பவர், அவர் வழிகேட்டில் இருப்பவர், மற்றும் சில வசனங்கள் அவரை தகாத நடத்தையுள்ள பெண்ணாகவும் சித்தரிக்கின்றன.
இப்படி பேசுவதற்கு, இன்னொரு சமூகத்தில் ஒரு விடயத்தை செய்தவர் நரகவாதியா? வழிகேடரா? அவரை இந்த நிலைக்கு இஸ்லாமிய ஷாரீஆ கொண்டுசெல்லுமா?

அப்படிப் பார்த்தால் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் இருந்து முஸ்லிம்கள் ஹிஜ்ரத் செய்யவேண்டிவரும். அப்படி ஹிஜ்ரத் செய்து எந்த நாட்டுக்கு செல்வது?

'நான் நற்பண்புகளை பூர்த்தி செய்யவே அனுப்பப் பட்டுள்ளேன்' என்னும் நபிகளாரின் பொன்மொழி
'மார்க்கவிடயத்தில் உங்களுடன் பொரிடமலும், உங்கள் வீடுகளைவிட்டு உங்களை வெளியேற்றாமலும் இருந்த அத்தகையவர்களுக்கு நன்மை செய்வதையும், நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை' (60:8) என்ற அல்குரான் வசனம்

இங்கு நான் தீர்ப்புத்தர வரவில்லை. அது எனது வேலையும் அல்ல. ஆனாலும் என்னில் எழுகின்ற கேள்விகள் இவை? அவற்றை உங்கள் சிந்தனைக்கு இங்கு முன்வைக்கிறேன்.

சரி ஒரு வாதத்திற்கு அவர் கொத்து விளக்கேற்றியது பிழை என்று வைத்துக்கொண்டால். ஏன் எமது கண்கள் அவரது நல்ல பக்கங்களை காணத்தவறின. ஒரு மனிதனிடம் எவ்வளவுதான் பிழைகள் மழிந்திருப்பினும் ஒரு நல்ல விடயமேனும் இருக்கும். ஏன் அவரது நல்ல பகுதிகள் சுட்டிக்காட்டப் படுவதில்லை? அந்த அளவுக்கு எமது உள்ளங்கள் இறுகி விட்டனவா? வெறி பிடித்துவிட்டனவா?

இது பற்றி இவைபோதும் என்று நினைக்கிறேன். அடுத்து முக்கிய விடயம் ஆண்களுக்கு கைலாகு கொடுத்த விடயம்.
இந்த நிகழ்வை வைத்து மேலோட்டமாகப் பார்த்து இது கூடாது என்று சொல்லலாம்.
அதுவும் அவர் பாதையி செல்வோர் வருவோரிடம் எல்லாம் கைலாகு கொடுத்தாக நாம் அறியவில்லை.
அத்துடன் பெண்கள் விரும்பிய ஆடவர்களுக்கு கைலாகு கொடுக்கலாம் என்று சகோதரி தவக்குல் கர்மான் சொன்னதாகவும் இல்லை.
இந்த நிலையில் அதற்காக அவரை இந்தளவுக்கு மோசமாக சித்தரிக்கலாமா? யாரோருவர் எம்மிடம் வந்திருந்து அவர் ஒரு பிழை செய்கிறார். அதற்காக எம்மை அல்லது அந்த நபரை அழைத்து வந்தவரை மோசமாகப் பேசலாமா?

இந்தக் கேள்விகளுக்கு அப்பால், ஒரு தவறை அல்லது பிழையை இல்லாமல் செய்வதற்கோ அல்லது திருத்துவதற்கோ இஸ்லாம் அழகிய வழிமுறைகளை சொல்லித்தந்துள்ள நிலையில், இஸ்லாமிய பெயர் தாங்கிய தௌஹீத் ஜமாஆத் இவ்வாறு செய்திருப்பது வருந்தத் தக்கது மட்டுமல்ல இஸ்லாமிய சமூகத்தில் அல்லது இலங்கை முஸ்லிம் அமைப்புகளிடம் இஸ்லாமிய அறிவு, பண்பாடுகள் இல்லையோ! என்ற ஒரு மனப்பதிவை அந்நியவர்களிடமும் பிற நாட்டு முஸ்லிம்களிடமும் ஏற்படுத்தக் கூடிய செயலாகக் காணப்படுகின்றது.

சகோதரி தவக்குல் கர்மானை சந்தித்து அவரது செயலுக்கான காரணத்தை கேட்டிருக்கலாம். அல்லது இந்த விடயம் இஸ்லாமிய விதிமுறைகளுக்கு அப்பற்பட்டது என்பதனை அவர்களுக்கு சொல்லிக்கொடுத்திருக்கலாம்.
இதற்கு மிகச்சிறந்த உதாரணம் மனிதர்களில் சிறந்த மூஸா அலை அவர்களுக்கு மிக மோசமான பிர்அவ்னுடன் சென்று எப்படி கதைக்க வேண்டும் என்று சொல்லும் அல்குரான் வசனம். நாம் இந்த வழிமுறைகளை விட்டுவிட்டு, இஸ்லாமிய பண்பாடுகளுக்கு அப்பால் சென்று இஸ்லாமிய வழிமுறைகளை போசுகின்றோம்! இது இஸ்லாமாகுமா என்ற வினாவை தவிர்க்க முடியாது எழுப்பவேண்டி ஏற்படுகின்றது.

இஸ்லாமிய சட்டவியலில் அடிப்படை நம்பிக்கைகளைத் தவிர அதிகமான விடயங்களில் இரண்டு, மூன்று கருத்துகள் ஹதீஸ்களிலே காணப்படுவது நாமறிந்தது. 
அதேபோன்று இந்த கைலாகு கொடுத்தல் விடயத்தில் கருத்துவேறுபாடுகள் இருப்பதை சொல்லியாக வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றேன்.

இந்தப் பிரச்சினை இவ்வளவு பூதாகரமாக அமைவதற்கு சில விவகாரங்கள் குறித்து வந்துள்ள ஹதீஸ்களை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொண்டதில் ஏற்பட்ட குழப்பமும், மற்றது இலங்கையில் நான் காணும் இப்பிரச்சினை தொடர்பான முதன்மையான காரணம் ஜமாஆத் அல்லது இயக்க வெறி என்ற உணர்வாகத் தான் காணப்படுகின்றது.

அந்த ஹதீஸ்களை அவதானித்தால்,
1. "ஒருவர் தனக்கு ஆகுமாகாத பெண்ணொருவரை தொடுவதை (மஸ்) விட தலையில் இரும்பாலான ஊசியால் குத்தப்படுவது சிறந்ததாகும்" என்ற ஹதீஸ்
2. "...கண்ணின் விபச்சாரம் பார்த்தல்,... கையின் விபச்சாரம் தொடுதல்..." என்ற ஹதீஸ்
3. "நபியவர்கள் எந்த பெண்ணின் கையையும் தொட்டு பைஅத் செய்தது கிடையாது" என ஆயிஷா ரழி அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்

மேலே குறிப்பிட்ட மஸ் தொடர்பான முதலாவது ஹதீஸை பொருத்தவரை இந்த ஹதீஸின் ஆதாரபூர்வம் தொடர்பான விடயத்தில் அனைத்து முஹத்திஸீன்களும் ஒருமித்த கருத்தில் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
அத்துடன் இந்த ஹதீஸ் குறிப்பிடும் தொடுதல் என்பது இச்சையுடன் தொடுதல், தகாத நோக்கில் தொடுவதையே குறிப்பதாக அல்லாமா கர்ளாவி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
அதே போன்று இதில் இன்னொருவிடயம் கவனிக்கத்தக்கது. கைலாகுகொடுத்தல் என்பதுவும் தொடுதல் என்பதுவும் இரண்டும் இருவேறுபட்ட அம்ங்களாகும். எனவே இங்கு குறிப்பிடப்படும் தொடுதலை கைலாகுடன் தொடர்புபடுத்த முடியாது.

இரண்டாவது ஹதீஸை அவதானித்தால் பார்த்த உடனே விபச்சாரமா? அப்படி இல்லை, இதனை ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன. முதல் பார்வை உனது இரண்டாவது பார்வை சைத்தானுடையது (அபூதாவூத்) என்று.
அத்துடன் இந்த ஹதீஸை முழுமையாகப் பார்த்தால் புரியும் இது சாதாரனமாக ஒரு விடயத்தை சொல்லிவிட்டுப் போக வந்த ஹதீஸ் அல்ல என்பது. இது ஒருவன் எப்படி விபச்சாரம் என்ற பாவத்தை நெருங்குகிறான் என்ற விடயத்தை கட்டம் கட்டமாக சொல்லும் ஒரு ஹதீஸ் ஆகும். இதில் வரும் தொடுதல் என்பது சாதரனமாக கைலாகு கொடுப்பதையோ, எந்த மோசமான உணர்வுகளும் இன்றி தற்செயலாக நடக்கும் ஒன்றையோ சொல்லவில்லை, மாறாக தெளிவாக தீய உணர்விடல் சம்பந்தப்பட்ட தொடுகையையே குறிப்பிடுகின்றது.


மூன்றாவது ஹதீஸை அவதானித்தால் இது பைஅத் என்னும் இஸ்லாமிய ஆட்சி தலைவருக்கு குடிமக்கள் வழங்கும் உறுதிப்பிரமாணமாகும். இதனை நபி ஸல் அவர்கள் பெண்களிடன் மூன்று முறைகளில் (வாய்மொழி, துணியிக்கு கீழால், நீர் நிரப்பிய பாத்திரத்தில் கையை இட்டு) பைஅத் வாங்கியுள்ளமை ஹதீஸ்களில் இருந்து நிரூபனமாகின்றது. இருந்த போதும் ஆயிஷா ரலி அவர்கள் ஒரு முறையையே அதிகமாக அறிவித்துள்ளார்கள்.

அத்துடன் இந்த ஹதீஸ் சொல்லும் மற்றொரு பிரதான அம்சம் நபி ஸல் அவர்கள் பல சந்தர்ப்பங்களில் பல பெண்களிடம் பைஅத் வாங்கியுள்ளார்கள். அவர்கள் பெண்களின் கையை நேரடியாக தொடாமல் மாற்று வழியைக் கையாண்டுள்ளார்களே தவிர - பெண்களுடம் கைலாகு கொடுப்பது, கையை தொட்டு பைஅத் வாங்குவது கூடாது ஹராம் என்று தெளிவாக சொல்ல முடியுமாக பல சந்தர்ப்பங்கள்  இருந்தும் அவர்கள் அப்படி ஒரு இடத்திலும் சொல்லவில்லை என்பது மிகப் பிரதானமானது, கவனிக்கத்தக்கது?

இது தவிரவும்
தபரானியில் அல்கபீர்-அலவ்ஸாத் பகுதியில் வரும் ஒரு ஹதீஸில் நபிகள் ஸல் அவர்கள் 'ஒரு துணியிக்குக் கீழால் பெண்களுடன் கைலாகு கொடுத்தார்கள்' என்று அறிவிப்பாளர் வரிசையுட இருப்பதாக அல் ஹைதமி குறிப்பிடுகின்றார் (இந்த ஹதீஸின் ராவிகளில் பின் ஹர்ப் என்பவர் பலவீணமானவர்) இதனை ஷெய்க் யூசும் இஸ்டீஸ் அவர்கள் தனது ஒரு பத்வாவில் குறிப்பிடுகின்றார்.

ஒரு பெண் வந்து தனது ஒரு தேவையை சொல்ல, அவளது தேவையை நிறை வேற்ற அப்பெண் நபிகளாரின் கையைப் பிடித்து தேவையான இடத்துக்கு அழைத்து செல்வார், தேவை முடியும் வரை அன்னார் அப்பெண்னின் கையை விடமாட்டார் என்ற ஹதீஸ் அஹ்மத், இபுனு ஹிப்பான் ஆகிய கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.

அதேபோன்று நஸ்ப் அல்ரயா என்ற கிரந்தத்தில் பதியப்பட்டுள்ள ஒரு ஹதீஸில் 'அபூபக்கர் ரலி அவர்கள் ஒரு வயோதிபப் பெண்ணுடன் கைலாகு கொடுத்தார்' எனப் பதியப்பட்டுள்ளதாக அல்ஸைலாய் குறிப்பிடுகின்றார்.

அதே போன்று மருத்துவத் தேவைகளுக்காக தவிர்க்க முடியாமல் ஆண்கள் பெண்களுடையதும், பெண்கள் ஆண்களுடையதுமான அங்கங்களை தொடவேண்டி ஏற்படுகின்றன. இந்த நிலையிலும் அதனை யாரும் ஹராம் என்று சொல்வதில்லை என்பதற்கு அப்பால் அதனை வரவேற்கின்றோம்.

அதேபோன்று ஒரு சில பெண் மகப்பேற்று வைத்தியர்கள் இருந்த போதும் எமது மனைவிமாரை அவர்களிடம் பிரசவத்திற்கோ, பரிசோதனைகளுக்கோ அவர்களிடமே அழைத்து செல்வதில்லை, எமக்கு நம்பிக்கையான, வசதியான, அன்மையில் உள்ள வைத்தியரிடமே அழைத்து செல்கின்றோம். இதில் ஹலால் ஹராம் பற்றி யோசிப்பதே இல்லை.

மகப்பேற்று மருத்துவரிடம் அழைத்து செல்வது ஆண்களுக்கு கைலாகு கொடுப்பதைவிடவும் மிகப் பாரதூரமானது என்பதை உரியவர்கள் அறிவார்கள்.

இந்தகைய விடயங்கள் இருக்கின்றமையை இந்த விமர்சகர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது ஆச்சரியமானது தான்.
எனவே இத்தகைய பல விடயங்கள் இருக்கின்ற நிலையில் கண்னை மூடிக்கொண்டு படுமேசமாக விமர்சித்தல் பிழையானது மட்டுலல்ல எம்மை நரகில் கொண்டுசேர்க்கும் செயலுமாகும்.
அல்லாஹுஅஹ்லம்.

ஒரு ஹதீஸைக் கூறி நிறைவு செய்கிறேன். 'ரஸூல் ஸல் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஹூத் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் 'யாருக்கு நரகம் ஹராமானதோ, யார் நரகத்துக்கு ஹராமோ அப்படியானவரை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?, மக்களுக்கு நெருக்கமான, இணக்கமான, மென்மையான ஒவ்வொரு மனிதருமாகும்' (திர்மிதி 2488, 2676)

அல்லாஹ் நாம் அனைவரதும் பாவங்களை மன்னித்து, பொருந்திக்கொள்வானாக. 

2 comments:

  1. அடப்பாவிகளா என்னடா விள்க்கம் இது,தவக்குல் கர்மானை கூட்டி வந்தது நீங்களா இலங்கை அரசாங்கமா

    ReplyDelete
  2. அடப்பாவிகளா என்னடா விள்க்கம் இது,தவக்குல் கர்மானை கூட்டி வந்தது நீங்களா இலங்கை அரசாங்கமா

    ReplyDelete